தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

டெலிகாம் துறையில் கூட்டுக்களவாணி முதலாளித்துவம்

டெலிகாம் துறையில் கூட்டுக்களவாணி முதலாளித்துவம்
- தோழர் பி.அபிமன்யு (அழகாக விளக்குகிறார் கொஞ்சம் அமைதியாக வாசியுங்கள்)

டெலிகாம் துறையில், 2016ஆம் ஆண்டு செப்டம்பரில், ரிலயன்ஸ் ஜியோ நுழைவுக்குப் பின்னர், ஒட்டுமொத்த டெலிகாம் துறையும் பயங்கரமான மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. டெலிகாம் துறையில் மிகப்பெரிய நிறுவனங்களாக விளங்கிய ஏர்டெல், வோடாபோன், ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நஷ்டத்தில் இயங்கத் தொடங்கியிருப்பதுடன், மிகவும் ஆழமான அளவில் பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாகி இருக்கின்றன.  ஏர்செல், டாடா டெலி சர்வீசஸ், அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலயன்ஸ் இன்போகாம் முதலானவை மூடப்பட்டுவிட்டன, இல்லையேல் மிகப்பெரிய நிறுவனங்களுடன் இணைந்துவிட்டன. பன்னாட்டு ஜாம்பவான் நிறுவனமான வோடாபோன், இந்தியாவில் தன்னுடைய  வர்த்தகத்தைத் தொடரமுடியாமல், குமாரமங்கலம் பிர்லாவுடைய ஐடியா நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. இப்போது அதன் பெயர் வோடாபோன் ஐடியா.
ஏர்டெல்லும், வோடாபோன் ஐடியாவும் தங்களுடைய வாடிக்கையாளர்களை மிகவும் வேகமானமுறையில் இழந்து வருகின்றன. இவற்றுடன் இணைந்திருந்த பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு மாதமும் ஜியோவுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள்.  பழைய நிறுவனங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும்தான் தன்னுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதுடன் சற்றே கூடுதலாக்கியும் இருக்கிறது.
ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் கடனில் மூழ்கியிருக்கின்றன. வோடாபோன் ஐடியா-வின் கடன் 1.20 லட்சம் கோடி ரூபாயாகும். ஏர்டெல் நிறுவனத்தின் கடன் 1.13 லட்சம் கோடி ரூபாயாகும். இவற்றுடன் ஒப்பிட்டால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கடன் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவேயாகும்.  டெலிகாம் துறையின் மொத்தக் கடன் கிட்டத்தட்ட 8 லட்சம் கோடி ரூபாயாகும் என்று கூறப்படுகிறது. இக்கடன்தொகையில் பெரும்பகுதி வங்கிகளின் செயல்படா சொத்துக்களாக (வராக் கடன்களாக) மாறி, வங்கித்துறையையும் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

டெலிகாம் துறைக்குள் ஜியோ(அம்பானி)வருவதற்கு முன்பிருந்த நிலை வேறாகும். இது ஒரு வளம் மிகுந்த துறையாக, அந்நிய நேரடி முதலீட்டைப் பெரிய அளவில் கவரக்கூடிய ஒன்றாக இருந்தது. ஆனால், ஜியோ வந்தபிறகு, இந்தத்துறையில் நிலைமைகளில் வேகமாக மாற்றங்கள் ஏற்பட்டன. ஜியோவைப் போலவே, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்களும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் விளங்கிய நிறுவனங்கள்தான். எனினும்கூட, ஜியோ மட்டும் எப்படி இதர டெலிகாம் நிறுவனங்களை தீர்மானகரமான முறையில் முறியடித்துவிட்டு தான் மட்டும் வேகமாக முன்னேற முடிந்தது?

ஜியோ நிறுவனத்திற்கு, அம்பானிக்கு மோடி அரசாங்கத்தால் மிகவும் அடாத விதத்தில் அனுகூலங்கள் வழங்கப்பட்டதன் காரணமாகவே, ஜியோ இதனைச் செய்ய முடிந்தது.
ரிலையன்ஸ் ஜியோவின் உரிமையாளரான முகேஷ் அம்பானி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது அனைவரும் அறிந்த ரகசியமாகும். ஜியோ தன்னுடைய சேவையைத் தொடங்கிய அன்று, பிரபல்யமான தேசியப் பத்திரிகைகளில் முதல் பக்கங்களில் வெளியான விளம்பரங்களில் ஜியோவின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, பிரதமர் மோடியின் படத்தைப் போட்டு, அவர், மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக வெளிவந்தன.  அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குக்கூட எந்தப் பிரதமரிடமிருந்தும் இத்தகைய அரவணைப்புக் கிடைத்ததில்லை. ஜியோ, நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தைப் பெற்றிருக்கிறது என்பதைக் காட்டக்கூடிய விதத்தில் இந்த விளம்பரமே செய்தியை மக்களிடம் எடுத்துச் சென்றது.

ஜியோ தன்னுடைய சேவைகளைத் தொடங்கிய அன்றிலிருந்தே, இதர டெலிகாம் நிறுவனங்களின் சேவைகளை அழித்து ஒழித்திடும் விதத்தில் தன்னுடைய நிறுவனத்தின் சேவைகளுக்கான விலைகளை நிர்ணயித்தது. ஆரம்பத்தில் இலவசக் குரலொலி (free voice), உரைகள் (text), தரவுகள் முதலானவற்றை தன் வாடிக்கையாளர்களுக்கு, “தொடக்கநிலை சலுகைகள்” (‘Welcome Offer) என்ற பெயரில் இலவசமாகவே வழங்கியது. ‘டிராய்’  எனப்படும் இந்திய டெலிகாம் முறைப்படுத்தல் அதிகாரக்குழுமத்தின் (TRAI-Telecom Regulatory Authority of India) கட்டளையின்படி இத்தகைய ‘இலவசங்களை’ “மேம்படுத்துவதற்கான சலுகை” என்பதன்கீழ் அளித்திடமுடியும். எனினும், இவ்வாறான இலவசங்களை 90 நாட்களுக்கு மட்டுமே வழங்கிட வேண்டும் என்று ஒரு நிபந்தனையுடன்தான் இதனைச் செய்திட முடியும். ஆனால், ஜியோ நிறுவனம் இலவசக் குரலொலி, உரைகள், தரவுகள் சேவைகளை,”புத்தாண்டு சலுகை” என்று பெயரை மாற்றி, 90 நாட்களுக்கும் மேல் நீடிப்பதைத் தொடர்ந்தது. இதர நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவே இதனைச் செய்தது. எனவேதான் இத்தகைய ஜியோ நிறுவனத்தின் உத்தியை, இதர நிறுவனங்களை அழித்து ஒழிப்பதற்கான நடவடிக்கை என்று சொல்வதைத்தவிர வேறெப்படியும் சொல்ல முடியாது.

ஜியோ நிறுவனத்தின் இறுதிக் குறிக்கோள், தன்னுடைய போட்டியாளர்கள் அனைவரையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதேயாகும். எனவேதான் இது ஒட்டுமொத்த டெலிகாம் துறையையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது.

இதில் மிகவும் துயரார்ந்த நிலை என்னவெனில், ஜியோ நிறுவனம் தன்னுடைய குறிக்கோளை எய்துவதற்காக, மோடி அரசாங்கமே வசதி செய்துகொடுப்பதாகும்.
இதர நிறுவனங்களை அழித்து ஒழித்திடும் விதத்திலான விலைகள் என்றால் என்ன? மிகவும் எளிதாகச் சொல்வதென்றால், எந்தவொரு பொருளையோ அல்லது சேவையையோ, தன்னுடைய போட்டியாளர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், அவற்றின் உற்பத்திச் செலவினத்திற்கும் குறைவான  தொகைக்கு விற்பது என்று பொருளாகும். 2003 மே மாதத்தில் வெளியிடப்பட்ட ‘டிராய்’ நிறுவனத்தின் கட்டளை, “டெலிகாம் சேவைகளின் மூலமாக இணையப் பயன்பாடுக் கட்டணங்கள் வசூலித்திடும் டெலிகாம் நிறுவனங்கள், இதர டெலிகாம் நிறுவனங்களை அழித்து ஒழித்துக்கட்டும் விதத்தில் தங்களின் விலைகளை நிர்ணயம் செய்திடக்கூடாது,” என்று கூறுகிறது. (“A teleco’s tariff would be considered non-predatory, if it is recovering Interconnect Usage Charges (IUC) and costs, through delivery of telecom services.”) இந்த வரையறையின்படி பார்த்தோமானால், ரிலயன்ஸ் ஜியோ இவ்வாறாக இதர டெலிகாம் நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் விதத்தில் விலை நிர்ணயம் செய்திருப்பதற்காகத் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், இதர நிறுவனங்களை விட குறைந்த கட்டணத்தை இது விதித்திருப்பது மட்டுமல்ல, அநேகமாக இலவசமாகவும் வழங்கிக் கொண்டிருக்கிறது. டிராய் இதில் நிச்சயமாகத் தலையிட்டு, ஜியோவை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். எனினும், டிராய், ஜியோ நிறுவனத்திற்குக் கொல்லைப்புற வழியாக, தன்னுடைய சொந்த கட்டளையையேமீறி, ஆதரவு அளித்துக்கொண்டிருப்பது, வருந்தத்தக்கதாகும்.
அதே சமயத்தில், ஜியோவைக் கட்டுக்குள் கொண்டுவர  டிராய் நிறுவனம் தவறிவிட்டது என்பதற்காக, அதனை இழுத்துப்பிடித்திடக்கூடிய தைரியம் அதிகாரவர்க்கத்தினர் மத்தியில் ஒருவருக்கு இருந்தது. அவர், டெலிகாம் முன்னாள் செயலாளராக இருந்த ஜே.எஸ். தீபக் ஆவார். அனைத்து டெலிகாம் நிறுவனங்களும், தாங்கள் ஈட்டிய வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீத அளவு,  உரிமக் கட்டணமாகவும், அலைவரிசைகள் கட்டணமாகும் அரசாங்கத்திற்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தற்போது அனைத்து டெலிகாம் நிறுவனங்களின் வருவாயும் கடுமையாக வீழ்ந்துள்ள நிலையில், இவ்வாறு அவை அரசாங்கத்திற்கு அளித்துவந்த உரிமக் கட்டணம் மற்றும் அலைவரிசைக் கட்டணமும் இயற்கையாகவே குறைந்துவிட்டன. ஜே.எஸ். தீபக் இந்தப் பிரச்சனையை டிராயிடம் எடுத்துச் சென்றார். 2017 பிப்ரவரி 23ஆம் தேதியிட்ட, டிராய் குழுமத்தின் தலைவர் ஆர்.எஸ். ஷர்மாவிற்கு அவர் எழுதியிருந்த கடிதத்தில், அரசாங்கம் 2016 அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடையிலான காலத்திற்கான உரிமக் கட்டணத்தில் 790 கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக் காட்டி இருந்தார். மேலும் அக்கடிதத்தில் ரிலயன்ஸ் ஜியோ நிறுவனம் இவ்வாறு இதர டெலிகாம் நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் நோக்கத்துடன் விலை நிர்ணயம் செய்திருப்பதைக் கட்டுப்படுத்திட உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் ஜே.எஸ். தீபக், ரிலயன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு எவ்விதமானக் கட்டுப்பாடும் விதிக்காமல் இந்த நிலை நீடிக்குமானால்,  டெலிகாம் நிறுவனங்கள் அலைவரிசைகளுக்கான கட்டணங்களாக அரசாங்கத்திற்கு அளிக்க வேண்டிய 3 லட்சத்து 08 ஆயிரம் கோடி ரூபாயை அளிப்பதற்கான சக்தியையும் அது பாதித்துவிடும் என்று எச்சரித்தார்.  ஆனால், அதன்பின் நடந்தது என்ன தெரியுமா? இவ்வாறு டிராயைக் கேள்வி கேட்டமைக்காக ஜே.எஸ்.தீபக் அந்தப்பதவியிலிருந்தே தூக்கி எறியப்பட்டிருக்கிறார். 2017 மார்ச் 1 அன்று அவர் டெலிகாம் செயலாளர் பதவியிலிருந்து, வர்த்தகத்துறையின் சிறப்புக் கடமை அதிகாரியாக (Officer on Special Duty) தூக்கி எறியப்பட்டுள்ளார். ரிலயன்ஸ் ஜியோ நிறுவனத்தின் செயல்பாடுகளுக்குக் குறுக்கே எவரேனும் வந்தால் அவருக்கு என்ன கதியேற்படும் என்பதை இவ்வாறு மோடி அரசாங்கம் நாட்டிற்குக் காட்டியிருக்கிறது.   அதே சமயத்தில், அரசாங்கத்திற்கும், டெலிகாம் நிறுவனங்கள் உரிமக் கட்டணம் மற்றும் அலைவரிசைக் கட்டணம் வழங்காததன் காரணமாக,  பல்லாயிரம் கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஜே.எஸ். தீபக் டிராய் குழுமத்திடம் கேள்வி கேட்டதற்குப்பின்னர், டிராய் நிறுவனத்தின் மீது மேலும் பலர் விமர்சனக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தனர். அது, ஜியோ நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கடுமையாக விமர்சனங்களைச் செய்தனர். இவ்வாறு வருகின்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு, டிராய் 2018 பிப்ரவரி 16 அன்று இதர டெலிகாம் நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் விதத்தில் குறைந்த கட்டணங்களை நிர்ணயம் செய்வது தொடர்பாக ஒரு புதிய வரையறையைக் கொண்டுவந்தது. இதன்படி, ஒரு நிறுவனம் வாடிக்கையாளர்களின் அல்லது வருவாயின் சந்தைப் பங்கில் 30 சதவீதத்தைப் பெற்றிருக்குமானால் அது ஒரு குறிப்பிடத்தக்க சந்தை அதிகாரம் படைத்ததாகக் கருதப்படும் என்பதாகும். (A company having 30 per cent market share of customers or revenue, is defined as an SMP (significant market power) இவ்வாறு ‘குறிப்பிடத்தக்க சந்தை அதிகாரம்’ பெற்றிருக்கக்கூடிய நிறுவனம் இதர நிறுவனங்களை ஒழித்துக்கட்டும்விதத்தில் குறைந்த கட்டணம் நிர்ணயிக்க முடியாது என்பதாகும். இதன் பொருள், ஒரு நிறுவனம், ‘குறிப்பிடத்தக்க சந்தை அதிகாரம்’ பெற்ற நிறுவனமாக இல்லையெனில், அது தான் வழங்கும் சேவைகளுக்காகக் குறைந்த கட்டணத்தை நிர்ணயித்திடலாம், அதனை, இதர நிறுவனங்களை ஒழித்துக்கட்டுவதற்கான விலை நிர்ணயம் என்று சொல்ல முடியாது என்பதாகும். இதில் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், ஜியோவின் சந்தைப் பங்கு 2018 ஆகஸ்டில்தான் 20 சதவீத குறியீட்டை எட்டியது. இவ்வாறு, 2018 பிப்ரவரி 16 அன்று டிராய் வெளியிட்ட உத்தரவு, ஜியோ நிறுவனத்திற்கு ஆதரவாக, தன்னுடைய விதிகளில், மிகவும் வெட்கக்கேடான முறையில், மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. 
எனினும் டிராயின் இந்த உத்தரவுக்கு எதிராக, டெலிகாம் தாவாக்கள் தீர்வுகாணுதல் மற்றும் மேன்முறையீட்டு நடுவர் மன்றத்தில் (TDSAT - Telecom Disputes Settlement and Appellate Tribunal).) மனு தாக்கல் செய்யப்பட்டது. நடுவர் மன்றம் டிசம்பர் 13 அன்று புதிய வரையறையை நிர்ணயித்த டிராயின் உத்தரவை ரத்து செய்தது. மேலும் நடுவர் மன்றம், டிராயை, டெலிகாம் கம்பெனிக்கு (ஜியோ என்று வாதித்திடுக) செயற்கையான முறையில் பாதுகாப்பு அளிப்பதற்காக இவ்வாறு புதிய வரையறை கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று கூறி டிராயைக் கண்டித்தது. நடுவர் மன்றத்தில் இந்த உத்தரவு, டிராயின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, அதன் உண்மையான சொரூபத்தை நாட்டு மக்களிடம் தோலுரித்துக் காட்டியது. ஜியோ நிறுவனம், இவ்வாறு இதர டெலிகாம் நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் விதத்தில் குறைந்த கட்டணம் விதிப்பதற்கு டிராய் அனுமதித்திருப்பது, ஜியோ நிறுவனத்திற்கு உதவிடுவதற்காக, டிராய் மேற்கொண்ட சூழ்ச்சித் திட்டமேயாகும்.
டிராய் குழுமம், ஜியோ நிறுவனத்திற்கு தகாதமுறையில் மற்றுமொரு அனுகூலத்தை அளிப்பதற்காக, வேறொரு தில்லுமுல்லு நடவடிக்கையையும் செய்திருக்கிறது. அதாவது, டிராய், ஜியோவின் இணையத்தொடர்புப் பயன்பாட்டுக் கட்டணத்தையும் (Interconnect Usage Charge (IUC)) வெகுவாகக் குறைத்திருக்கிறது.  ஒரு டெலிகாம் நிறுவனத்தின் வலையமைப்பிலிருந்து, மற்றொரு நிறுவனத்தின் வலையமைப்புக்கு அழைப்பு சென்றால், முந்தைய டெலிகாம் நிறுவனம், பிந்தைய டெலிகாம் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்திட வேண்டும். இதற்கு ஐயுசி  (இணையத்தொடர்புப் பயன்பாட்டுக் கட்டணம்) (IUC-Interconnect Usage Charge) என்று பெயர். இதற்கான கட்டணம் நிமிடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை என்கிற அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. 2017 டிசம்பரில், ரிலயன்ஸ் ஜியோ 16 கோடி (160 மில்லியன்) வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தது. இதனால், ஜியோ நிறுவனம் இதர டெலிகாம் நிறுவனங்களுக்க அதிக அளவில் இணையத்தொடர்புப் பயன்பாட்டுக் கட்டணங்களை அளிக்க வேண்டியிருக்கிது. எனவே, ஜியோ நிறுவனத்திற்கு உதவுவதற்காக, டிராய், ஐயுசி கட்டணத்தை 2017 அக்டோபரிலிருந்து 57 சதவீத அளவிற்குக் குறைத்துள்ளது. இதன் விளைவாக, ஜியோ நிறுவனம் மிகப்பெரிய அளவில் ஆதாயம் அடைந்தது. உண்மையில், இவ்வாறு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, ஜியோ லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறிட டிராய் உதவியிருக்கிறது. ஜியோ துவங்கப்பட்டு 15 மாதங்கள் ஆகியிருந்தபோதிலும், அதுவரையிலும், ஜியோ நஷ்டத்தில்தான் இயங்கிக் கொண்டிருந்தது. 
உதாரணமாக, 2017 ஜூலை – செப்டம்பர் காலாண்டுக்காலத்தில் 2,140 கோடி ரூபாய் ஐயுசி கட்டணமாகக் கொடுத்திருக்கிறது. ஆனால், அதன்பின்னர் 2017 அக்டோபர் – டிசம்பர் காலாண்டுக் காலத்திற்கு அது 1,082 கோடி ரூபாய் மட்டுமே ஐயுசி கட்டணமாகக் கொடுத்திருக்கிறது. இவ்வாறு ஜியோவின் ஐயுசி சுமையை டிராய், 50 சதவீதம் குறைத்துவிட்டது. இதன் விளைவாக, முதன்முறையாக, 2017 அக்டோபர் – டிசம்பர் காலாண்டுக் காலத்தில், ஜியோ 504 கோடி ரூபாய் நிகர லாபமாக ஈட்டியது. 2017 ஜூலை – செப்டம்பர் காலாண்டுக்காலத்தில் ஜியோ 271 கோடி ரூபாய் நட்டத்தில் இருந்தது என்பது குறித்துக்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான அம்சமாகும். மேலும், இவ்வாறு ஐயுசி கட்டணத்தைக் குறைத்ததன் காரணமாக, பழைய நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன், ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் தங்கள் வருவாயில் வீழ்ச்சியினை எதிர்கொண்டன. இவ்வாறு ஐயுசி கட்டணத்தைக் குறைத்ததன் காரணமாக 2017 அக்டோபர் – டிசம்பரில் ஏர்டெல் நிறுவனத்தின் இலாபம் 39 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.
இவ்வாறு டிராய் நிறுவனமும் மோடி அரசாங்கமும்  மேற்கொண்ட அறநெறி பிறழ்ந்த நடவடிக்கைகள், முகேஷ் அம்பானிக்கு டெலிகாம் துறையைக் கைப்பற்றிட மிகப் பெரிய அளவில் உதவியிருக்கின்றன. இந்த நடவடிக்கைகளின் காரணமாக, டெலிகாம் துறை நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்திற்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
(கட்டுரையாளர், பிஎஸ்என்எல் அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் சங்கங்களின் கன்வீனர்)
(தமிழில்: ச. வீரமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக